×

அரசு பஸ், கார், ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி விபத்து கொக்கிரகுளத்தில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ்

நெல்லை, ஏப். 21: நெல்லை கொக்கிரகுளத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடிய தனியார் பஸ், நின்றுகொண்டிருந்த அரசு பஸ், கார், ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதியதில் 11 பேர் காயம் அடைந்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லை கொக்கிரகுளத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. கொக்கிரகுளம் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மதியம் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகேயுள்ள சிக்னலில் பொருட்காட்சி திடல் செல்லும் அரசு பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் பின்னால் பயணிகள் ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டு இருந்தது. அப்போது பாளையில் இருந்து பேட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அந்த பஸ் வேகத்தடையை தாண்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஆட்டோ முன்னால் நின்றுக்கொண்டு இருந்த அரசு பஸ் மீதும், அருகே இருந்த கார் மீதும் மோதியது. இதனால் வாகனங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் தெறித்து விழுந்தன.

இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் இருந்த பத்தமடையைச் சேர்ந்த டிரைவர் நாகூர்மீரான் (54), பீர்முகமது (59), ராஜபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (37) மற்றும் தனியார் பஸ்சில் பயணம் செய்த சுத்தமல்லியை சேர்ந்த கோமதி (55), மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த சண்முககுமார் (45), குறிச்சியை சேர்ந்த பேச்சியம்மாள் (40), சுத்தமல்லி காந்திநகரை சேர்ந்த ராஜேஸ்வரி (40), புளியங்குடியை சேர்ந்த பரமசிவன் (65) உட்பட 11 பேர் காயம் அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கவுரி உடனே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அனைவரையும் மீட்டு நெல்லை சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் முக்கூடல் அருகே உள்ள கபாலிபாறையை சேர்ந்த அப்துல்ரகுமான் (31) என்பவருக்கும் காயம் ஏற்பட்டதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் வண்ணார்பேட்டையில் இருந்து கொக்கிரகுளம் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் ரெக்கவரி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சீராக்கினர்.

The post அரசு பஸ், கார், ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி விபத்து கொக்கிரகுளத்தில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் appeared first on Dinakaran.

Tags : Cockkagulam ,Cockrakulam ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...